நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம்.

அடுத்தவருடம் மார்ச்மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொதுத்தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை 2023 வரவுசெலவுதிட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட்டு பின்னர் வருட முடிவிற்குள் பொதுத்தேர்தலை நடத்துவதில் உள்ள சவால்கள் காரணமாக அரசாங்கம் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்தல்களை நடத்துவது குறித்து ஆராய்கின்றது.

அடுத்தடுத்து தேர்தல்களை நடத்துவதில் உள்ள சவால்களை கருத்தில் கொள்ளும்போது மார்ச்மாதத்தில் தேர்தல்களை நடத்துவதே யதார்த்தபூர்வமான தீர்வாக காணப்படுகின்றது.எனினும் இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் புதிய எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தலாம், பொதுத்தேர்தல் மார்ச் மாதம் இடம்பெற்றால் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறமுடியாத நிலை உருவாகலாம், இதன் காரணமாக பல கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டணி அரசாங்கம் உருவாகலாம்.

இதேவேளை முன்கூட்டிய தேர்தல்கள் குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன,கூட்டணி அரசாங்கமொன்றிற்கான சாத்தியக்கூறுகள் அதன் விளைவுகள் குறித்து அரசியல் கட்சிகள் ஆராய்கின்றன.