21ம் திகதி முதல்  முதல் மாங்குளத்தில்  அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும்:புகையிரத திணைக்களம் அறிவிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் முறிகண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரண்டு புகையிரத நிலையங்கள் காணப்படுகிறது. இந்த இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுக்கான புகையிரத சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பிரதான புகையிரத நிலையமாக மாங்குளம் புகையிரத நிலையம் காணப்படுகின்றது.

மாங்குளம் புகையிரத நிலையம் ஊடாகவே அதிகளவான முல்லைத்தீவு மக்கள் தமக்கான சேவையை பெறக்கூடியதாக இருக்கிறது.இருப்பினும் மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன முற்ப்பதிவு வசதிகள் இல்லாமையாலும் கடுகதி புகையிரதம் நிறுத்தப்படாமையாலும் மக்கள் மாத்திரமன்றி அரச அதிகாரிகளும் புகையிரத சேவையை பெற கிளிநொச்சி அல்லது வவுனியா புகையிரத நிலையங்களுக்கே செல்லவேண்டிய நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு சேவைகளையும் வழங்குமாறு பவ்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் பலதடவைகள் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு மாவட்ட செயலகத்தினால் கொழும்பு புகையிரத நிலைய தலைமைக்காரியாலயத்திற்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் இது தொடர்பான கோரிக்கைகள் அனுப்பபட்டிருந்ததோடு மாங்குளம் புகையிரத நிலைய அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது முயற்ச்சியால் எதிர்வரும் 21.10.2023 முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 05.10 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 க்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.  வெள்ளிக்கிழமைகளில் யாழ் நிலா இரவு 22 00 மணிக்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு அதிகாலை 4.20 க்கு வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.

ஞாயிறுகளில் காங்கேசன்துறை யில் இருந்து மதியம் 1.15 க்கு புறப்படும் குளிரூட்டிய கடுகதி புகையிரதம் மாங்குளத்திற்கு 14.54 ற்கு வந்தடைந்தது கொழும்பை நோக்கி செல்லும்.ஞாயிறுகளில் யாழ்நிலாபுகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 21.30 க்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 23.20 க்கு வந்தடைந்து கொழும்பு நோக்கி செல்லும்.இதனைவிட ஏற்கனவே நிறுத்தப்பட்டுவந்த அனைத்து புகையிரதமும் வழமைபோல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புகையிரத திணைக்களத்துக்கு நன்றி தெரிவிப்பதோடு விரைவில் ஆசன ஒதுக்கீட்டு வசதியையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.