ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்ப்பதற்காகவே ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டேன்: ராகுல்காந்தி


அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம்  அறிவித்த 5 மாநில தேர்தல்களில் மிசோராம் சட்டமன்ற தேர்தலும் ஒன்று. மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வெவ்வேறு தேதிகளில் நடைபெறும் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன. அதிலும் தேசிய கட்சிகளான பாஜக> காங்கிரஸ் மாநிலந்தோறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் சேர்த்து மேற்கொண்டு வருகின்றனர்.மிசோராமில் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி> அங்கு ஆளுநர் மாளிகை நோக்கி நடைபயண பேரணியில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் நடைபயணம் மேற்கொண்டேன்.

அதன் மூலம் நாடு முழுவதும் இருந்த ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வெறுப்பு சித்தாந்தத்தை எதிர்த்து போராடினேன். ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனித்துவமான பண்பாடு பாரம்பரியம் மற்றும் மத நடைமுறைகள் உள்ளது . அந்த தனித்தனி  நடைமுறைகள் தான் இந்தியாவின் அடித்தளங்கள் ஆகும். மக்கள் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கோ மொழியைப் பேசுவதற்கோ அல்லது பாரம்பரியத்தைப் பின்பற்றுவதற்கோ பயப்படும் நிலை இருக்கவே கூடாது. அப்படி இருந்தால்  அது நாம் விரும்பும் இந்தியா அல்ல.

இப்படியான செயல்களை தான் பாஜக சித்தாந்தம் செய்யும். இதற்கு சிறந்த உதாரணம் மணிப்பூர் கலவரம் தான். அனைத்து வகையான வன்முறைகளுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் மன்னிக்க மாட்டோம். வன்முறையை யார் செய்தாலும் எப்படி செய்தாலும் அது தவறு என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசினார்.