பிரெசெல்ஸ் நகரில் சூட்டுச் சம்பவம்! இருவர் உயிரிழப்பு.
![](https://static.wixstatic.com/media/e1ea69_e2fcae7bdf424dedb0e9451406f0c490~mv2.jpg/v1/fill/w_740,h_411,al_c,lg_1,q_80,enc_auto/e1ea69_e2fcae7bdf424dedb0e9451406f0c490~mv2.jpg)
தீவிரவாதத் தாக்குதல் அறிகுறி துப்பாக்கிதாரி தப்பியோட்டம் சுவீடன் பிரஜைகளே இலக்கு! எல்லைப் பாதுகாப்பை இறுக்கியது பிரான்ஸ்
பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸின் மையப்பகுதியில் இன்று முன்னிரவு ஏழு மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
பிரகாசமான ஒரேஞ் வர்ண ஜக்கெட் அணிந்திருந்த தாக்குதலாளி ஒருவர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டு விட்டு ஸ்கூட்டர் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்ற காட்சிகள் சம்பவ இடத்தில் பதிவாகி உள்ளன என்று பெல்ஜியம் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு சிவிலியன்கள் உயிரிழந்ததை அரச வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது. இருவரும் சுவீடன் நாட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோ 2024 (Euro 2024) உதைபந்தாட்டப் போட்டிக்கான தகுதிகாண் ஆட்டத்தில் சுவீடன் நாட்டு அணி விளையாடிக் கொண்டிருந்த சமயத்திலேயே பிரெசெல்ஸ் நகரில் தாக்குதல் நடந்திருக்கிறது. உயிரிழந்த சுவீடிஷ் பிரஜைகள் இருவரும் அந்த ஆட்டத்தைக் காண்பதற்காக வருகை தந்தவர்களா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை.
நபர் ஒருவர் ஆண்டவனது பெயரில் இந்தத் தாக்குதலைத் தானே நடத்தினார் என்று அரபு மொழியில் கூறுகின்ற வீடியோப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ள்ளது. ஆனால் அதில் தோன்றுபவர் கொலையாளிதானா என்பது உறுதிப் படுத்தப்படவில்லை.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாக்குதல் சம்பவத்தை அடுத்துப் பொலீஸார் பிரெசெல்ஸ் நகரைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார். பெல்ஜியம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், நகர முதல்வர் ஆகியோர் நெருக்கடிகால மையம் ஒன்றில் சந்தித்துப் பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
தாக்குதலாளி பிரான்ஸுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பெல்ஜியம் எல்லையில் சோதனையைத் தீவிரப் ப்படுத்துமாறு பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.