நானுஓயாவில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு.

செ.திவாகரன்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .

எனினும் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரி ஏற்படுவதற்கு அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் , தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக அடிக்கடி கடும் பனி மூட்டம் நிறைந்து காணப்படுவதனால் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.