வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அலுவலர்களை வெளிநாடுகளில் விட்டு வியாபாரம் செய்திறார்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே  குற்றச்சாட்டு.

வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அலுவலக பணியாளர்கள் போன்று ஆட்களை அழைத்துச் சென்று ஐரோப்பிய நாடுகளில் இறக்கிவிட்டு வரும் வியாபாரமொன்று இடம்பெறுவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மற்றும் தேர்தல்கள்  சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நாட்டில் புதுப் புது நாடகங்கள் நடக்கின்றன. கானீயா என்ற பெண் தொடர்பில் நாடகமொன்றை அரங்கேற்றி அந்தப் பெண் தூதரகம் ஒன்றுக்குள் புகுந்தார். அத்துடன் நிஷாந்த சில்வா என்பவர் சீ.ஐ.டி.யின் தகவல்களுடன் வெளிநாட்டுக்கு சென்றார். அதேபோன்று புதிய நாடகம்தான் முல்லைத்தீவு நீதவான் விவகாரம். தனக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால் அவர் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். அதனை செய்யாது வெளிநாட்டு பிராஜவுரிமையையை பெற்றுக்கொள்ள வழியை ஏற்படுத்தியுள்ளார்.

நீதவான் திட்டமிட்டே இதனைச் செய்துள்ளார். இதேவேளை சபாநாயகரிடம் விடயமொன்றை முன்வைக்கின்றேன். நாடாளுமன்றத்தில் 225 பேர் தொடர்பிலும் தேடிபார்க்க வேண்டும், ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த காலங்களில் தமது அலுவலக பணியாளர்கள் போன்று அழைத்துச் சென்று அங்கே அவர்களை இறக்கிவிட்டு வருகின்றனர். வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் கடந்த 10 வருடங்களாக தமது அலுவலக பணியாளர்கள் என்று கூறி பலரை அழைத்துச் சென்று அவர்களை அங்கே விட்டு வரும் வியாபாரமொன்று நடக்கின்றது.

அங்கு சென்ற பின்னர் இலங்கையில் வாழ முடியாது என்று பொய்யான பிரச்சினைகளை கூறி அங்கு இருப்பதற்காக இலட்சக் கணக்கான பணத்திற்காக இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றனர். இது தொடர்பில் 225 பேரின் விபரங்களையும் ஆராய வேண்டும் என்றார்.