12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரத்தக்கறையுடன் சாலையில் சென்ற அவலம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமிரத்தக்கறையுடன் அரை நிர்வாணமாக வீதியில் உதவி கோரி அலைந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஈடுபடுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி என்றே பகுதியில் 12 வயது சிறுமி, அரை நிர்வாணமாகவும், இரத்தக்கரை படிந்த உடையில் தெருக்களில் சென்று உதவி கேட்டும், யாரும் கண்டு கொள்ளாத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உஜ்ஜயினி நகரின் தண்டி ஆசிரமம் அருகே வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் அந்த சிறுமியை விரட்டி விடுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது.

ஒரு கட்டத்தில் வீதியில் நடந்து திரிந்த அந்த சிறுமி நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர், சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, மருத்துவப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு பிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில், ஒருவரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உஜ்ஜைன் நகர் காவல்துறைக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், காவல்துறை தாக்கல் செய்த ஆரம்ப அறிக்கையின் விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டது.