திருகோணமலையில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் பௌத்த விகாரை கட்டுமானப்பணிகள்.


திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இரகசியமாக முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருதாக தெரியவந்துள்ளது.

விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 3ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின்னர் 09ஆம் திகதி காலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பெயர்ப்பலகை நடப்பட்டிருந்தது.

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் படையினரது பங்கேற்புடன் இரவிரவாக கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.ஏற்கனவே நீதிமன்ற தடையினை தாண்டி முல்லைதீவு குருந்தூர்மலையில் விகாரை அமைப்பு பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.