பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஏன் முறிந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கருத்து.

முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது தனது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து இருந்த போதும், கூட்டணிக்குள் இருக்கும் கட்சி குறித்த விமர்சனமானது அதிமுகவினரின் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து பேட்டியளித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது என செய்தியாளர்கள் மத்தியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த கூட்டணி முறிவை இரு கட்சியை சேர்ந்தவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த கூட்டணி ஏன் முறிந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், அதிமுக தன்மானத்திற்குக்கு இழுக்கு ஏற்பட்ட காரணத்தால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என கூறினார்.பாஜக கூட்டணியில், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் இருந்த காரணத்தால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அப்படி இல்லை எங்கள் முன்னாள் அமைச்சர்களை  விமர்சித்து பேசுவது, எங்கள் மாநாட்டை குறை கூறி பேசுவது என கூட்டணி கட்சியினரையே விமர்சிக்கும் போக்கு பாஜகவிடம் இருந்தது. தன்மானம் தான் எங்கள் சொத்து, அதனால் தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என வைகை செல்வன் தெரிவித்தார்.

கூட்டணி முறிவுக்கு பின்னர் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் இபிஎஸ் வியூகம் அமைத்து வருகிறார் . நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறுவோம் எனவும் வைகை செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.