சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வாரணாசியில்  பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று சென்றுள்ளார். வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

இதற்காக உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட ஸ்டேடியத்தை நிறுவ உள்ளது.30 மாதங்களுக்குள் மைதானத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளது என்றும், திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.