தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது கனடா – வெளியுறவுத்துறை

னடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கொல்லப்பட்டார். இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளில் உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன.

இந்த சமயத்தில்,  கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியது. கனடா நாட்டின் விண்ணப்பெக் பகுதியில் கொல்லப்பட்ட சுக்தூல் சிங் இந்திய அரசின் NIA அமைப்பால் தேடப்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது. கனடாவில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது. கனடாவில் அடுத்தடுத்த காலிஸ்தான் தீவிரவாதி கொலை சம்பவம் இரு நாடுகளிடையே விரிசலை உருவாகியுள்ளது.

இப்படி தொடர்ந்து கனடா -இந்தியா நாடுகளின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நேரத்தில்,  இந்திய தூதரகம் அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த தடை மூலம் கனடா நாட்டில் இருந்து யாரும் இப்போதைக்கு இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பாதுகாப்பு காரணங்களுக்காக கனடாவில் இருந்து இந்தியா வருவோருக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொலை தொடர்பான கனடாவின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது. இதற்கான ஆவணங்கள் எதையும் அந்நாட்டு அரசு தரவில்லை.

ஹர்தீப் சிங், நிஜார் வழக்கில் எந்த தகவலையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக குற்றசெயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு எடுக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக கனடா மண்ணில் நடக்கும் செயல்பாடுகள் தொடர்பாக நாங்கள் தகவல்களை கொடுத்துள்ளோம். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.  தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல் பரவி வருகின்றனர்.

கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை விட, இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் அதிகம். இந்த எண்ணிக்கையில் ஒரு சமநிலை வேண்டும். கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும். குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும் என்றும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கனடா பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றசாட்டியுள்ளார்.