தமிழர்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண  சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை: அத்துரலியே ரத்ன தேரர் குற்றச்சாட்டு.

காணிப் பிரச்சினைக்கு காணி ஆணைக்குழு ஊடாக தீர்வு காண வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் பல முறை வலியுறுத்தியதாகவும், தமிழர் பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மேய்ச்சல் தரை பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் அப்பிரதேசங்களில் மந்தை மேய்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினர் இந்த அடிப்படை பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துவதில்லை.முறையான மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள், பசுக்கள் வனவள பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.

சட்ட விரோதமான முறையில் மாடறுப்புக்களும், கால்நடைகள் கொல்லப்படுவதும் சாதாரணமாகவே இடம்பெறுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது அத்தியாவசியமானது.காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை என்றும், காணி ஆணைக்குழு ஊடாக தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் பல முறை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. தேவையற்ற விடயங்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.