ஆசிய கோப்பை கிரிக்கெட் – இலங்கை எதிரான போட்டியில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதியது . இதில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இந்திய அணியில் ஒரே மாற்றமாக ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 19 ஓட்டங்களில் போல்ட் ஆனதைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய விராட் கோலி 3 ஓட்டங்களில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அரைசதத்தைக் கடந்த ரோகித் சர்மா 53 ஓட்டங்களில் போல்ட் ஆனார். சற்று நிதானமாக ஆடிய இஷான் கிஷன் 33 ஓட்டங்களிலும் , கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களிலு ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது.

அதன்படி,   214 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 42 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் சரித் அசலங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை  வீழ்த்தினார்.