நுவரெலியாவில் பேருந்து – உந்துருளி நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் வைத்தியசாலையில்

டி.சந்ரு செ.திவாகரன்.

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியை செலுத்திச் சென்றவர்கள் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெளிமடையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் நுவரெலியாவில் இருந்து பொரகஸ் பிரதேசத்தை நோக்கி பயணித்த உந்துருளி மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது .

குறித்த விபத்தானது உந்துருளி பயணித்த திசையில் நுவரெலியாவிலிருந்து மீபிலிமான நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.