ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதை எதிர்த்த தீபாவின் மனு தள்ளுபடி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிய தீபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 பினாமி நிறுவனங்களில் 65 அசையும்இ அசையா சொத்துக்களின் தற்போதைய மதிப்புடன் கூடிய அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சொத்துக்களின் தற்போதைய மதிப்பீட்டை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுமார் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர்.

ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள், காலணிகள், கை கடிகாரங்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து என்றும் சட்டவிரோத சொத்து பட்டியலில் சேலைகள், காலணிகள் இல்லாததால் அவற்றை ஏலம் விட உத்தரவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் வங்கி கணக்கில் உள்ள பணம் பற்றி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.