தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை-ஜனாதிபதி ரணில்.

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை ஆரம்பமாகியது.

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை  தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகை ஆகியோர் ஆயர்கள் திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

இதேவேளை திருவிழா திருப்பலியை ஒட்டி மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.