யாழ்ப்பாணம் –19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் கொலை.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம்  உயிரிழந்துள்ளமை  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற  குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியொருவருடன் தொடர்பினை ஏற்படுத்திவந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 5 ஆம் திகதி தத்தமது   வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாகக்  கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து  இருவரும் நேற்றையதினம் (07) ஊருக்கு வந்தவேளை உறவினர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இதில்  படுகாயமடைந்த  மரியதாஸ் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்  எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குறித்த யுவதியும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.