நுவரெலியாவில் துப்பாக்கி சூட்டில் முடிந்த கணவன் – மனைவி மோதல்

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கணவன் மனைவி எனவும் திருமணமாகி எட்டே மாதங்களான எண்டன் தாஸ் (வயது 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது 32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டு கணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பான என்டன்தாஸின் தாயாரின் வாக்குமூலமானது – நான் எனது மகன் மற்றும் மருமகளுடன் தனியான வீட்டில் வசித்து வருகின்றோம் வழமை போல திங்கட்கிழமை இரவு எனது மகனுக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பட்டு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார் மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடக்கின்றாள் யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார் நான் அயலவர்களை கூப்பிடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டனர் என தாயார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் நீதவான் விசாரணைக்கு பிறகு உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் என மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .