நந்திக்கடல் பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம்  ஆரம்பம்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற – பல்லாயிரம் மக்களைப் படையினர் படுகொலை செய்த – தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை மீட்டதாக அரசு அறிவித்த நந்திக்கடல் பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் கரையோரப் பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களைக் கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை சுற்றுலாத் தளங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி கரையோரப் பகுதிகளில் 24 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் நந்திக்கடல் கடற்பகுதியும் உள்ளடங்கியுள்ளது. உப்புவெளி, சாம்பல் தீவு, நாயாறு ஆகிய கடற்கரை பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.