சுதந்திர தின அணிவகுப்புக்காக இந்திய வீரர்களுடன் போர் விமானங்கள் பாரிஸ் வருகை.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

சீக்கியப் படையணியின் தலைமையில் பங்கேற்பு
உலகப் போர்களுக்குப் பின் பாரதப் படைகள் பிரான்ஸில்.

பிரெஞ்சுப் படைகளோடு இணைந்து அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ள இந்தியாவின் முப்படை வீரர்கள் 269 பேர் அடங்கிய அணிக்குப் பஞ்சாப் படைப்பிரிவினர் (Punjab Regiment) தலைமை வகிக்கவுள்ளனர்.

இந்தியாவின் சீக்கியப் படைப் பிரிவு (Sikh Regiment) உலகப் போர்களின் போது பன்னாட்டுப் படைகளோடு இணைந்து பிரான்ஸ் மண்ணில் போரிட்டிருந்தது. அந்தப் படைப் பிரிவினர் சுமார் நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் பாரிஸ் தெருக்களில் அணிவகுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் பிரெஞ்சு வான்படை நடத்தவுள்ள விமான அணிவகுப்பில் இந்தியாவின் மூன்று ராஃபேல் போர் விமானங்களும் இணைந்துகொள்ளவுள்ளன.
படம் :1916 இல் சீக்கியப் படை வீரர்கள் பாரிஸில் அணிவகுப்பில் ஈடுபட்ட சமயம் பிரெஞ்சுப் பெண் ஒருவர் அவர்களுக்குப் பூங்கொத்தை வழங்கிய வரலாற்றுக் காட்சி.
பிரான்ஸில் “பஸ்தில் நாள்”(Bastille Day) எனக் குறிப்பிடப்படும் சுதந்திர தின நிகழ்வில் இந்த முறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கௌரவ வெளிநாட்டு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
பாரிஸ் – புதுடில்லி இடையிலான இருதரப்பு மூலோபாய உறவு (strategic partnership) 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டியே அதன் சிறப்பு அடையாளமாக இந்தியாவின் அரசுத் தலைவரை விழாவுக்கு அழைத்துக் கௌரவப்படுத்த பிரான்ஸ் அரசு தீர்மானித்திருந்தது.
நாட்டில் அண்மையில் மூண்ட இளைஞர் கலவரங்களை அடுத்து சுதந்திர நாள் வைபவங்கள் கடும் பாதுகாப்புக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படவுள்ளன. நாடு முழுவதும் வாணவெடி சாதனங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டிருக்கிறது.