மலையகத்தில் தொடர்ச்சியாக மழை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு.

செ.திவாகரன்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இன்று (03) காலை நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டு, மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுவதனால் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக அடிக்கடி கடும் பனி மூட்டம் நிறைந்து காணப்படுவதனால் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.