திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் மட்டுமே பயன்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் மட்டுமே பயன் அடைவார்கள் என்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.மத்திய பிரதேச மாநிலத்துக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் போபால்- இந்தூர், போபால்-ஜபல்பூர், ராஞ்சி-பாட்னா, தார்வாட்-பெங்களூரு, கோவா-மும்பை ஆகிய 5 ரயில் சேவைகளை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில்கள் சேவைகள் தொடங்கி வைத்த பிறகு, பாஜக பூத் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ஊழல்வாதிகள் அனைவரும் பிகார் மாநிலத்தில் கைகோர்த்ததாக கடுமையாக விமர்சித்தார்.

ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார். யாரையும் விடப்போவதில்லை என்று கூறிய பிரதமர், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவித்தார். நாடு எப்படி இரண்டு சட்டங்களில் இயங்கும் என்று கேட்ட பிரதமர், எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் செய்துவருவதாகவும் விமர்சித்தார்.