கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி மோசடி: 6 பேர் கைது.

கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி ஈடுப்பட்ட ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதன்படி, கோட்டை நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய நேற்று கடவத்தை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த போலி ஆவண நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கிருந்து, 03 கணனிகள், 03 மடிக்கணினிகள், 04 அச்சிடும் கருவிகள், 01 ஸ்கேனர், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், தூதரகத்திற்கு அனுப்பத் தயாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 1,187,130 ரூபாய் பணம் மற்றும் ஆண் ஒருவரும், ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் 68 வயதுடையவர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவா் எனவும், ஏனைய பெண்கள் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.விசா கோரி வருபவர்களின் பெயரில் போலியான லெட்டர்ஹெட்களை பயன்படுத்தி பல்வேறு சொத்து விவரங்கள், நிலையான வைப்பு சான்றிதழ்கள், கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.