வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது தொடர்பாக முடிவாகவில்லை என அறிவிப்பு.

வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது தொடர்பாக இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை என்று தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் புதிய பௌத்த விகாரைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அண்மையில் உத்தரவொன்றை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரமனதுங்க, இந்த விடயம் தொடர்பாக இதுவரை இறுதி முடிவொன்று எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகவும் எனினும் இது குறித்து இணக்கப்பாட்டிற்கு தாங்கள் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஜனாதிபதியின் உத்தரவை நிராகரிக்கவும் இல்லை என்று தெரிவித்த அவர், இது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.