கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை: கஜேந்திரகுமாருக்கு எதிராக போராட்டம் நடத்த   சிங்கள ராவய திட்டம்.

மருதங்கேணி காவல் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்குமூலம் வழங்கும்வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தனது வீட்டிற்கு வந்து சிங்களத்தில் எழுத்துமூல ஆவணமொன்றை வழங்கினார்கள் என்றும் தன்னால் சிங்களத்தில் வாசிக்க முடியாது என்பதால் அதனை தான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன் என   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளர்.

அதன் பின்னர் சிங்களத்தில் அதனை வாசித்த அவர்கள் தான் அதற்கு கட்டுப்படவேண்டும் என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார். தான் மருதங்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகும் வரை நாட்டை விட்டு தடைவிதிக்ககோரும் வேண்டுகோளை கிளிநொச்சி நீதவானிடம்  காவல்துறையினர் விடுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நான்  காவல் நிலையத்தில் வாக்குமூலத்தை பதிவுசெய்யும் வரை வெளிநாட்டிற்கு செல்வதற்கு எனக்கு அனுமதியளிக்கவேண்டாம் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சபாநாயகரிடம்  மனுக்கொடுப்பதற்கும்  கஜேந்திரகுமாருக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில்ஈடுபடுவதற்கும் சிங்கள ராவய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மீறியுள்ளார் என சிங்கள ராவய தனது மனுவில் குறிப்பிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.