பௌத்த மயமாக்கலை  எதிர் கொள்ளும் திருகோணமலை அரிசிமலைப் பிரதேசம்


திருகோணமலையிலுள்ள அரிசிமலை என்கிற தமிழ் பேசும் மக்களின் பிரதேசம்  யுத்தம் முடிந்த நாள் முதல் பௌத்த மயமாக்கலை  எதிர்கொண்டு வருகின்றது .இப்பகுதியில தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரைக்கான  அடிக்கல் மஹிந்த ராஜபக்சே அதிகாரத்தில் நாட்டப்பட்டு இருந்தது .

அதே போல 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது .நல்லாட்சி காலத்திலும் 25 ஏக்கர் காணி பௌத்த பிக்குகளின் தேவைக்கென வழங்கப்பட்டு இருந்தது .

அதே போன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது .பௌத்த பிக்குகள் தவிர சாதாரண மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு இருக்கின்றது .இப்பகுதி எங்கும் புத்த துறவிகளுக்கானது என்றும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறதுஇங்கு பிக்குகளுக்கான தியான மண்டபங்கள், வாழ்விடங்கள் உட்பட பல அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அதே போன்று அரிசிமலை கடற்கரையின் தென்மேற்கே உள்ள காட்டு பகுதியில் கூட புத்த கோவில் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்இதுமட்டுமல்லாது இப் பகுதியை சூழ பல இடங்களிலும் புத்தர் சிலைகளையும் சிறிய பௌத்த கோவில்களை நிறுவி இருக்கின்றார்கள். இங்குள்ள பாணமுரே திலகவன்ச நாயக்க தேரர் பௌத்தமயமாக்களின் பிரதான சூத்திரதாரியாக இருக்கின்றார்.இவர் வடக்கு கிழக்கு பௌத்த மகா சங்கத்தின் தலைவராகவும் அறியப்படுகின்றார்.

அதே போன்று கோட்டாபய ராஜபக்சே நியமித்து இருந்த கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராகவும் கடமையாற்றி இருந்தார். அண்மையில் பொன்மலைக்குடா பகுதியில் காணி அபகரிப்புக்காக தமிழ் முஸ்லீம் மக்களை அச்சுறுத்திய சிங்கள காடையர்க்ளுக்கு மேற்படி பிக்கு தான் தலைமை தாங்கி இருந்தார்தற்போது மேற்படி பிக்கு தலைமையிலான குழுவினர் புல்மோட்டை, அரிசிமலை தென்னன்மரவாடி என குச்சவெளி பிரதேச செயலக பகுதிகளில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகளை நிறுவ முயற்சித்து வருகின்றனர்.