அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஏ.எஸ்.வை. – 013 என்ற விமானத்தில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவர்கள், இன்று காலை 9.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடிப் படகுகள் மூலம் கடல் கடந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.