IMF-ஜனாதிபதி ரணில் விசேட உரை .

கடந்த வருடம் ஜூலை மாதம் நாட்டில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட போது, ​​யாரும் இந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கவில்லை எனவும், அதனை ஏற்குமாறு தம்மிடம் கோரப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. என்னுடையது என்று கூறுவதற்கு பாராளுமன்றத்தில் எனது கட்சி உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை. ஆனால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையே தனது பலம் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வசதியைப் பெறுவது, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் ஒரு படியாக அமையும். இந்த கடன் வசதி 4 ஆண்டுகளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இதற்கு மேலதிகமாக ஏனைய தரப்பினர்களிடம் இருந்து சுமார் 7 பில்லியன் டொலர்களை துரித கடனுதவியாக நாடு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சிலர் IMF EFF ஐ இன்னொரு கடனாகக் கருதுவதாகவும், சிலர் பெற்ற பணத்தில் நாட்டின் முழுக் கடனையும் செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர். இந்தக் கருத்ததுக்கள் அறியாமை அல்லது அரசியல் இலாபங்களுக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

IMF EFF ஊடாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம் மீளக் கிடைக்கும் எனவும், நாடு வங்குரோத்தாகாது என்று உறுதியளிப்பதாகவும், சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற வங்கிகளுக்கு உதவுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறைந்த வட்டியில் கடன்களுக்கான வாய்ப்புகளை இது உருவாக்கி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் நிதானமாகவும் பொறுமையாகவும் பல அழுத்தங்களையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வசதியை பெற்றுக் கொள்வதற்கு இந்த நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை பெரும் பலம் என ஜனாதிபதி குறிப்பிட்டதுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நாம் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்த செயல்முறை முழுவதும், நாம் பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டியேற்படும். நமது வெற்றியின் அடித்தளம் இந்தப் பாதையில்தான் இருக்கும். இந்த சீர்திருத்தங்களில் சில ஏற்கனவே 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் 2023 வரவுசெலவுத்திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாங்கள் இன்னும் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனது விசேட உரையின் போது தெரிவித்தார்.