7 வயது சிறுமி உயிரிழப்பு -தாய், கள்ளக்காதலன் கைது!
![](https://meiveli.com/wp-content/uploads/2023/03/child-muder-e1678327998946.jpg)
சுகயீனத்திற்கு சிகிச்சைப் பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத ஏழு வயது சிறுமி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை ஹிரண பிரதேசத்தை சேர்ந்த வாய் பேச முடியாத சிறுமியின் மரணம் தொடர்பாக தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் மரணம் கொடூரமான தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தாய் மற்றும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் இவர்களை கைவிட்டு சென்றதாகவும், அவரது தாயார் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் பண்டாரகம பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர், குறித்த சந்தேக நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
சந்தேகநபரான கள்ளக்காதலனின் அழைப்பின் பேரில் குறித்த பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
அங்கு சந்தேகநபர்கள் சிறுமியை கொடூரமாக தாக்கியமை தற்போது தெரியவந்துள்ளது.
சிறுமியின் சடலத்தை பரிசோதித்த பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க, சடலத்தை களுபோவில போதனா வைத்தியசாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணத்தை அறிக்கையிடுமாறும் மற்றும் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.