இலங்கையின் சுதந்திர நாளை தமிழர்கள் கரிநாள் ஆக கடைப்பிடிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு.
![](https://meiveli.com/wp-content/uploads/2023/01/IMG-20220204-WA0018.jpg)
மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் சிங்கள பேரினவாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது.
போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழ் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும் என்றம் அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.