சமஷ்டி தொடர்பில் வாய் திறக்காத கட்சிகள்: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம்.

பேச்சுவாரத்தைக்கு போவதற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம் அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தலின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தை மேசையில் நீங்கள் போய் அமர்ந்து கொள்வதனூடாகவே ரணிலுக்கான அங்கீகாரத்தை கொடுப்பதாக அமையும் என்பதை இவர்களுக்கு மீண்டும் மீண்டும் கூறினோம் எனத் தெரிவித்த அவர் ரணிலுக்கு இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுத்து விட்டார்கள் எனக் குற்றம் சுமத்தினார்.

ஆகக்குறைந்தது அந்த அங்கீகாரத்தை கொடுப்பதாக இருந்தால் இனத்திற்காக கொள்கை ரீதியிலாகவாவது  முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய சூழலையாவது உருவாக்காமல் அந்த அதிகாரத்தை கொடுப்பதானது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை  கூறிவிருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிலங்கா அரசு பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்ற இந்த தருணத்தில் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு சென்றது இனத்திற்கும் இந்த தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என அவர் காட்டமான தெரிவித்தார்.

இவ்வாறான தருணத்தில், தமிழ் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எந்த சந்தர்ப்பத்திலும் மேற்கொண்டுவருகி்ன்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் அதே பாதையிலேயே பயணிக்கும் என்பதோடு மக்கள் நலன் கருதாத எந்தவொரு இடத்திலேயும் எவருக்காகவேனும் எந்தவொரு விட்டுக்கொடுப்மையும் கொள்ளைகள் சார்ந்து மேற்கொள்ளப்போவதில்லை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.