மட்டக்குளியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சுற்றி வளைப்பொன்றில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட  நபர் ஒருவர், மட்டக்குளியில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பி.எம்.ஆர். அம்பேபிட்டியவின்  நேரடி கட்டுப்பாட்டில் மட்டக்குளி மற்றும் கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் இரு பொலிஸ் குழுக்களும்,கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த நான்கு பேரையும் நேற்று (13) மாலை கைது செய்தனர்.

சந்தேக நபர்களை வெல்லம்பிட்டி மற்றும் கொத்தட்டுவ பகுதிகளில் வைத்து கைதுச் செய்ததாக பொலிஸார் கூறினர்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் கொலையாளிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும்  வெல்லம்பிட்டி மற்றும் பொரளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.  அதன்படி இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இக்கொலை இடம்பெற்றுள்ளமையும், பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவர் பின்னணியில் இருப்பதும் இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறுதியாக கைதுசெய்யப்பட்ட நால்வரையும், கைது செய்யும் போது அவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருளும் இருந்ததாக கூறும் சி.சி.டி.யின் பொலிஸ் அதிகாரிகள், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினர்.

மட்டக்குளி, சாவியா  ஒழுங்கையைச் சேர்ந்த 38 வயதான  மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் பர்ஹான் என்பவர், மட்டக்குளி மெத மாவத்தை வீதியில் வைத்து  கடந்த நவம்பர் 28 ஆம் திகதி  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

 கோட்டை நீதிவான் நீதிமன்றில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடுத்திருந்த  கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான வழக்கொன்றில் ஆஜராகிவிட்டு, தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பர்ஹான் இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்திந்தார்.

 பர்ஹான்,  மட்டக்குளி மெத மாவத்தையில் இருந்து, சாவியா ஒழுங்கைக்குள் தனது காரை திருப்ப முற்பட்ட வேளை,  அவரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று சிறு விபத்தொன்றை ஏற்படுத்தி பர்ஹானை காரிலிருந்து கீழே இறங்கச் செய்த பின்னர், கூரிய ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.