அவசர அறிவிப்பு-இலங்கையை அண்மிக்கும் சூறாவளி.
![](https://meiveli.com/wp-content/uploads/2022/12/16705569870-e1670566737274.jpg)
இன்று காலை 5.30 மணிக்கு அவதானிக்கப்பட்ட ,புள்ளி விபரங்களின் படி: சூறாவளியின் நகர்வு பாதையானது எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு அண்மையாகவே சென்று கொண்டு இருக்கிறது. இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள்
இன்று மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.5 மீ) வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மீனவ சமூகங்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வரை வீசுவதுடன், அம்பாந்தோட்டை ஊடாக காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (65-75) வரை வீசக்கூடும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.