2வது ஒருநாள் போட்டி : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெற்றது .இந்த போட்டியில்  நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ டகுட்ஸ்வானாஷே 7 ஓட்டங்களில்  சிராஜ் பந்துவீச்சில் சாம்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீன் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி ஓட்டங்களை குவித்தார். 42 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஷிகர் தவானிடம்  பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். பின்கள வீரர்களில் ரியான் 39 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது. தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் ,தவான் களமிறங்கினர்.கே.எல்.ராகுல் தொடக்கத்த்தில் 1  ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.பின்னர் களமிறங்கிய கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.மறுபுறம் அதிரடியா விளையாடிய தவான் 33  ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்துவந்த இஷான் கிஷன் 6 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.தொடர்ந்து கில் 33 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் தீபக் ஹூடா ,சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர்.தீபக் ஹூடா 25  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் சாம்சன் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் எடுத்தார் . .இதனால் இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ,இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.