அதிரடி தீர்ப்பு: முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ஆயத்தால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டில், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும், மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களை மீண்டும் அழைக்க நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ஆயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.