என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வீடுகளில் முடங்கிக்கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, காத்தான்குடி என்.எம் இன்ஸ்டிடியூட் (NM Institute) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இலங்கையிலுள்ள அனைத்து பாகத்திலிருந்தும் பங்கு கொள்ளக்கூடிய வகையில் பிரம்மாண்டமான திறமைக் கண்காட்சிப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.
காத்தான்குடியில் உள்ள ‘ரோயல் ஜுமைரா ஹால்’ (Royal Jumairah Hall) இல் நடைபெறவிருக்கும் இப்போட்டி குறித்து என்.எம் இன்ஸ்டிடியூட்டின் பணிப்பாளர் முஸ்தகிமா நௌபல் இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இது வெறும் கல்விப் பட்டம் பெற்றவர்களுக்கான போட்டி அல்ல என்றும், கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், தங்களுக்குள் ஏதேனும் ஒரு கைத்தொழில் திறமையைக் கொண்டுள்ள வயதுவரையின்றி அனைவரும் இதில் பங்கேற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திறமைக் கண்காட்சியில் ஆரி வேலைப்பாடு, தையற்கலை, கேக் தயாரிப்பு, பேஸ்ட்ரி பேக்கரி, சமையற்கலை, எம்பிராய்டரி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மணமகள் அலங்காரம் மற்றும் சிறியவர்களுக்கான ஜூனியர் செஃப் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டியில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், அனுசரணையாளர்களால் வழங்கப்படும் சிறப்புப் பரிசு வவுச்சர்கள் மற்றும் நினைவுப் பரிசுகளும் காத்திருக்கின்றன. 3,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இப்போட்டியை நேரில் பார்வையிடவுள்ளதால், பங்கேற்பாளர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகளும், ஓடர்களும் கிடைக்க அரிய சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எம் இன்ஸ்டிடியூட் இந்தத் திட்டத்தை வணிக நோக்கமாகக் கொள்ளாமல், முழுக்க முழுக்க சேவை நோக்கத்துடன் நடத்துகிறது. இப்போட்டியின் மூலம் பெறப்படும் வருமானம், நிர்வாகச் செலவுகள் போக மீதி அனைத்தும் மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் நலனுக்காக முழுமையாக நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
குறிப்பாக, அவர்கள் நடப்பதற்கும், கேட்பதற்கும் தேவையான சக்கர நாற்காலிகள் போன்ற உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அதேவேளை, இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு, வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் பட்டங்களை தருவதாகக் கூறி போலியான சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றமை குறித்தும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் பல பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது நகைகளையும், வாகனங்களையும் விற்று பணத்தை இழக்கின்றனர். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருந்து, முறையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுக்குமாறு என்.எம் இன்ஸ்டிடியூட் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது காத்தான்குடியில் இயங்கி வரும் என்.எம் இன்ஸ்டிடியூட், மிக விரைவில் கொழும்பிலும் தனது கிளையைத் திறக்கவுள்ளது. குறைந்த கட்டணத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், இந்தத் திறமைக் கண்காட்சியில் பங்கேற்கவும் விருப்பமுள்ளவர்கள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் தங்களது பெயர்களைத் தயக்கமின்றிப் பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

