அரசாங்கம் போரை சாட்டி மக்களைச் சுரண்டுகிறது; எரிபொருள் விலையைக் குறைக்கத் தவறியுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் சாடல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் காரியாலயத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தி அவர்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளதால், மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாகக் குறைந்து வருகின்றது என்றார். நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய அரசாங்கம் மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு சூத்திரமாக மாற்றியமைத்துள்ளதுடன், மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி, எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான புதிய சுரண்டல் முறையொன்றையும் உருவாக்கியுள்ளது.
யுத்தம் காரணமாகவே அனைத்துப் பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் உயர்வதாக அரசாங்கம் கூறிய போதிலும், தற்போது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கம் குறைவடைந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 75 முதல் 80 டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பலனை மக்களுக்கு வழங்கி, உள்நாட்டிலும் எரிபொருள் விலையைக் குறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பாத்திருந்த வேளையில், விலையைக் குறைக்க முடியாது என்றே அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.
மத்திய கிழக்கு யுத்தம் பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த போது இலங்கையிடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தார்.
அவ்வாறாயின், புதிய எண்ணெய் கப்பல்கள் எதனையும் இறக்குமதி செய்யாமல், மார்ச் மாதத்தில் மட்டும் அரசாங்கம் நான்கு முறை எரிபொருள் விலையை அதிகரித்தது. பெப்ரவரி மாதத்தில் 67 டொலர்களுக்கு வாங்கிய பழைய இருப்புக்கே அரசாங்கம் மார்ச் மாதத்தில் இவ்வாறு விலையை உயர்த்தியது. ஆனால், தற்போது உலகச் சந்தையில் விலை குறைந்துள்ள போது, அதிக விலைக்கு வாங்கியதாகக் கூறி விலையைக் குறைக்க அரசாங்கம் மறுக்கிறது. பெப்ரவரி 28 இற்குப் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோல் 142 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் 155 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 126 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 146 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் பெற்றோல் விலை 74 ரூபாவினாலும், டீசல் விலை 67 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் புதுடில்லியில் டீசல் லீட்டர் ஒன்று இலங்கை நாணயப்படி 357 ரூபாவாக இருக்கும் போது, வரிக்குறைப்பு மூலம் அங்கு டீசல் லீட்டருக்கு 33 ரூபா நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், இலங்கையில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு மக்கள் அரசாங்கம் அல்ல, இது ஒரு ஏமாற்று அரசாங்கமாகும். தேர்தலுக்கு முன்பு எரிபொருள் மீதான அநியாய வரிகள் நீக்கப்படும் என்றும், எரிபொருள் லீட்டர் ஒன்றிலிருந்து அமைச்சருக்கு கமிஷன் செல்வதாகவும் கூறினார்கள்.
அப்படியாயின் இப்போது அந்தப் பணம் யாருடைய பாக்கெட்டுக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். எரிபொருள் விலை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வினவினால், அரசாங்கம் முறையான தகவல்களை வழங்குவதில்லை என்பதுடன் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவையும் அரசாங்கம் முடக்கி வருகின்றது. சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கம் அமைந்திருந்தால், இந்த நிலைமைகளை இதைவிடச் சிறந்த முறையில் கையாண்டு எரிபொருள் விலையைக் குறைத்திருக்க முடியும்.
அதேபோல், மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திஸ்ஸா (DITVA) திட்டத்திற்காக செலவிடப்பட்டதாக ரில்வின் சில்வா கூறிய கருத்து தனக்குத் தெரியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தியை பிரதமர் பார்க்கவில்லை என்பதை ஏற்க முடியாது.
ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் பேசப் பயந்தே அவர் அவ்வாறு கூறுகிறார். தனது பிரதமர் பதவி பறிபோய்விடும் என்ற பயத்திலேயே பிரதமர் வாழ்கிறார்.
மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர்கள் இருக்கும் போதே இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு நிதியமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடைசியாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிய பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே பாரிய போராட்டத்தை நடத்தியது. ஷாணி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நடந்த அநீதி குறித்து சஜித் பிரேமதாசவே பேசினார். அநுர குமார திஸாநாயக்க இதுகுறித்து ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. தற்போதைய அரசாங்கம் நடத்தும் விசாரணைகளை நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பாஸ்கர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தராதரமின்றி சட்டம் நிலைநாட்டப்படும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

