சோசலிச மாணவர் சங்கத்தின் முன்னாள் தேசிய அமைப்பாளர் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதை ஊழல்வாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

 


1988-1989 காலப்பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்று, புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய தோழர் அனுரகுமார திசாநாயக்க இன்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதை, அழிந்து வரும் ஊழல்வாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய மாணவர் வீரர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
> “1988-1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து தப்பிப் பிழைத்து, களனிப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து, அங்கு சோசலிச மாணவர் சங்கத்தை மீண்டும் கட்டியெழுப்பியவர் தோழர் அனுரகுமார திசாநாயக்க ஆவார். அந்த அமைப்பின் முதலாவது தேசிய அமைப்பாளராகச் செயற்பட்ட அவரே இன்று இந்த நாட்டை ஆட்சி செய்யும், உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கும் உன்னத தலைவராக விளங்குகிறார். இதனை எண்ணி நாம் அனைவரும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டும்” என்று சுனில் ஹந்துன்னெத்தி பெருமையுடன் குறிப்பிட்டார்.