“எந்தவொரு சமூகமும் தங்களை சிறுபான்மையினராகக் கருத நான் இடமளிக்க மாட்டேன்” – நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உறுதி

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

 

நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும், இளைஞர் யுவதிகளின் முன்னேற்றத்திற்காகவும் உண்மையானதும் நேர்மையானதுமான ஒரு சமூக ஒருமைப்பாடு அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், டொலர்களை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டணிகளோ அல்லது தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்படும் கூட்டணிகளோ நாட்டுக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தினார்.

மாறாக, மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்த ஒரு சர்வஜன கூட்டணியே இன்றைய தேவையாகும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சர்வஜன சக்தியின் (பலய) அரசியல் கொள்கை பிரகடனத்திற்கு அமைய, இந்நாட்டின் வாழும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், எவ்வித காரணத்திற்காகவும் தாங்கள் இந்த நாட்டில் “சிறுபான்மையினர்” என நினைப்பதற்கு அல்லது தங்களைத் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகக் கருதுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்தார்.