எல் நினோ’ நிலை குறித்து இலங்கையர்களுக்கு அச்சமூட்டும் எச்சரிக்கை: கடல் நீரைக் குடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறல்
Meiveli Media Team

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமாக உருவாகியுள்ள ‘எல் நினோ’ நிலைமை, இலங்கையில் கடுமையான வறட்சி மற்றும் நீர் நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக இடர் மேலாண்மை நிலையம் எச்சரித்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டில் கடுமையான வறட்சி நிலை உருவாகக்கூடும் என வளிமண்டல திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கணிக்கப்பட்டுள்ள அளவிற்கு தீவிரமடைந்தால், நாட்டின் பிரதான நீர் ஆதாரங்கள் கூட வற்றிப்போகும் அபாயம் இருப்பதாக இடர் மேலாண்மை நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்க வேண்டிய நிலையும் உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வழக்கமான வறட்சி காலங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் வண்டிகள், இம்முறை எதிர்பார்க்கப்படும் நெருக்கடியை சமாளிக்க போதுமானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த வறட்சி நிலை விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீர் மேலாண்மை, மாற்று ஆற்றல் திட்டங்கள் மற்றும் அவசரகால தயார்படுத்தல்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

