விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் கே.பியிடம் பறிமுதல் செய்யப்பட்டதங்கங்கள்  எங்கே: சரத் பொன்சேகா கொடுத்த தகவல்

Meiveli Media Team

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பொறுப்பாளராக அறியப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான தங்கத்தின் நிலை குறித்து புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வாக்குமூலத்திற்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், 2009 ஆம் ஆண்டு கே.பி. கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்ததாகக் கூறப்படும் தங்கம் அரசாங்கத்தினாலும் பாதுகாப்பு அதிகாரிகளினாலும் கைப்பற்றப்பட்டதாக ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். எனினும், கே.பி. கைது செய்யப்பட்ட காலத்தில் தாம் இராணுவத் தளபதியாக இல்லாமல், பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியாக பதவி வகித்ததாகவும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் தொடர்பான எந்தத் தகவலும் தமக்குத் தெரியாது என்றும் பொன்சேகா கூறினார்.

மேலும், 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாம் அந்தப் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றதாகவும், அதையே ஆணைக்குழுவில் விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். போருக்குப் பிந்தைய காலத்தில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சொத்துக்கள் எவ்வாறு கையாளப்பட்டன, அவை யாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்பதைக் கண்டறியும் நோக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.