14 மாவட்டங்களில் டெங்கு அபாயம்: முப்படைகளின் ஒத்துழைப்புடன் கொழும்பில் விசேட ஒழிப்பு செயற்திட்டம் ஆரம்பம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக்கட்டுப்படுத்துவதற்கான விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் இன்றைய தினம் (ஜூன் 08) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் இந்த விசேட தூய்மைப்படுத்தல் மற்றும் சோதனையிடும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் கபில கன்னங்கர, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், நாட்டின் 14 மாவட்டங்களிலுள்ள 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50% முதல் 55% வரை அதிகரித்துள்ளதுடன், இதுவரை 20 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், தென் மாகாணத்தில் மாத்தறை, காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில் நுவரெலியாவிலும், சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் இந்த நோய் பரவல் தற்பொழுது அதிகரித்து வருகின்றது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட லார்வாப் புழுக்கள் தொடர்பான ஆய்வுகளின்படி, மனிதர்களால் கைவிடப்படும் மற்றும் அலட்சியமாக வீசப்படும் பொருட்களிலேயே டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பெருகுவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலை வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள் மற்றும் பொது மக்கள் வாழும் வீட்டு வளாகங்கள் ஆகியவற்றில் நுளம்புப் பெருக்கம் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் கோப்பைகள், இளநீர் கோம்பைகள், வெற்று டின்கள் மற்றும் பொலித்தீன் பைகள் போன்ற 10 மில்லி லீட்டருக்கும் அதிகமான சுத்தமான நீர் தேங்கி நிற்கக்கூடிய எந்தவொரு இடத்திலும் ‘ஈடிஸ்’ (Aedes) வகை நுளம்புகள் பெருகுகின்றன. கடந்த வருடத்தில் ‘டெங்கு வைரஸ் வகை 3’ அதிகமாகக் காணப்பட்ட நிலையில், இவ்வருடம் ‘டெங்கு வைரஸ் வகை 2’ (DENV-2) அதிகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படுவதால், நோய் வேகமாகத் தீவிரமடையும் அபாயம் உள்ளதுடன், இது கடுமையான குருதிப்போக்கு மற்றும் அதிர்ச்சி நிலை போன்ற உயிராபத்தான நிலைகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இன்று காலை ஆரம்பமான விசேட சோதனை நடவடிக்கைகளில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), முப்படைகளின் சிப்பாய்கள், சுற்றாடல் பொலிஸார் மற்றும் புகை விசிறல் உதவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தலா மூன்று பேரைக் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, கொழும்பு பொது வைத்தியசாலை வளாகம், மருதானை, பொரள்ளை போன்ற மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வளாகங்களை இக்குழுவினர் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர். இந்த விசேட களப்பணி அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரவுள்ளதுடன், இந்நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

டெங்கு நுளம்புகள் 100 முதல் 200 மீற்றர் தூரம் வரை பறக்கக்கூடியவை என்பதால், பொது மக்கள் தமது வீடு மட்டுமன்றி அருகிலுள்ள பாழடைந்த காணி மற்றும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வாரத்தில் 30 நிமிடங்களை ஒதுக்குமாறு வைத்தியர் கபில கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மூன்றாவது நாளில் உடனடியாகத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடுமாறு அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தாமதமாக சிகிச்சையளிப்பதே பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதால், இரத்தப் பரிசோதனை மூலம் அது டெங்கு காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்