அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கி அதிகாரிகளை வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஒட்டுமொத்த அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களை முறையானதொரு கட்டமைப்பின் ஊடாக மேம்படுத்துவதற்குமான தேசிய அளவிலான விசேட கலந்துரையாடலொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடல், பிரதி அமைச்சர்களான ருவன் செனரத் மற்றும் எரங்க வீரரத்ன ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் (03) நடைபெற்றது.
வேகமாக மாறிவரும் உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நாட்டின் அரச சேவையின் செயல்திறனை அதிகரிப்பதும், சேவை தாமதங்களைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும். இதன்போது, அரச சேவையை “நபர்களை அடிப்படையாகக் கொண்ட” பாரம்பரிய முறையிலிருந்து “கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட” நவீன முறைக்கு மாற்றுவதன் அவசியம் கடுமையாக வலியுறுத்தப்பட்டதுடன், குறிப்பாக சிரேஷ்ட அதிகாரிகளிடம் காணப்படும் தொழில்நுட்ப பயத்தைப் போக்கி, அவர்களுக்குள் டிஜிட்டல் திறன்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதும், அதிகாரிகளின் அறியாமையினால் ஏற்படும் சைபர் தாக்குதல்கள் மற்றும் தரவு அபாயங்களைத் தவிர்ப்பதற்கான சைபர் பாதுகாப்பு அறிவை வழங்குவதும் முதன்மைப் பணியாக இனம் காணப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, மின்-கற்றல் கட்டமைப்பொன்றை (E-Learning Platform) பயன்படுத்துவது குறித்த தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், நீண்ட விரிவுரைகளுக்குப் பதிலாக, 2-3 நிமிடங்கள் கொண்ட 10-15 சிறிய வீடியோக்கள் மூலம் மொபைல் போன்கள் ஊடாகக் கற்கும் “குறுகிய கால கற்றல் வழிமுறை” (Micro-learning) இங்கு முன்மொழியப்பட்டது. இந்த டிஜிட்டல் எழுத்தறிவுப் படிப்புகளைப் பூர்த்தி செய்வது, அரச அதிகாரிகளின் வருடாந்த செயல்திறன் மதிப்பீடு மற்றும் பதவி உயர்வுகளுக்கான கட்டாயக் கொள்கைத் தேவையாக மாற்றப்படவுள்ளதுடன், அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் உள்ள கணினி ஆய்வகங்களை மாலை 4.30 மணிக்குப் பின்னர் பயிற்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தவும் இணக்கம் காணப்பட்டது. மேலும், கற்றல் செயல்முறையை ஊக்குவிப்பதற்காக ‘Gamification’ (Badges வழங்கும் முறை) மற்றும் டிஜிட்டல் கையொப்பத்துடனான சான்றிதழ்களை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் ஒரு முப்பரிமாணத் திட்டத்தின் (Three-Tiered Plan) கீழ் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய தற்போது சேவையில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்களின் தொழில்முறை மட்டங்களுக்கு ஏற்ப பயிற்சி அளித்தல், புதிய நியமனங்களின் போது டிஜிட்டல் எழுத்தறிவு கொண்டவர்களை சேவைக்குள் உள்வாங்குதல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தயாரித்தல் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக, சைபர் பாதுகாப்பு குறித்த அடிப்படை விழிப்புணர்வுப் பாடநெறியும், Gmail/WhatsApp/Viber ஆகியவற்றிற்குப் பதிலாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் (Email) மற்றும் கூட்டுப்பணி கருவிகளை (Collaboration tools) சரியாகப் பயன்படுத்துவதற்கான நடைமுறைப் பயிற்சியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டமானது டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மட்டுமன்றி, ராஜ்ய பரிபாலன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும் என விவாதிக்கப்பட்டதுடன், தொடர்புடைய பிரிவினருடன் கலந்துரையாடி தேவைகளை இனம் கண்டதன் பின்னர், விஞ்ஞானப்பூர்வமான திட்ட முன்மொழிவொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த விசேட கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ராஜ்ய பரிபாலன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அமைச்சின் ஆலோசகர் உபுல் அபேசிறிவர்தன மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மையத்தின் (CODL) விசாகா நாணயக்கார உள்ளிட்ட துறைசார் நிபுணர்களும், இரு அமைச்சுகளினதும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

