சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரனுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் பாராட்டும் கௌரவிப்பும்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் (23) பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றாலும், எமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை மறவாமல் சர்வதேச அரங்கில் நிலைநாட்டியுள்ள இந்த வெற்றி ஒட்டுமொத்த மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

“உங்களது அர்பணிப்பும் விடாமுயற்சியும் எமது இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், மலையக இளைஞர்களின் தன்னம்பிக்கைக்குச் சான்றாகவும் விளங்குகின்றது. தாய்நாட்டிற்கும் சமூகத்திற்கும் உலகளவில் பெருமை சேர்த்த உங்களது ‘தற்காப்புக் கலைப்’ பயணம் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், திறமையானவர்களுக்கு கட்டாயம் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு பெரும் சான்றாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பன்னீர்செல்வம், இலங்கை ஐயப்ப சுவாமிகளின் மகாசபையின் குருசுவாமி ரவீந்திரன் குரு சுவாமி, தமிழ்நாடு உலக தமிழர் சங்கம் சென்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலாநிதி T. இளங்கோவன், கொழும்பு செட்டியார்தெரு எவர்க்ரீன் விளையாட்டு கழகத்தின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.