எதிர்வரும் நாட்களில் கனமழை படிப்படியாகக் குறையும்: வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வளிமண்டலத் தொகுதியானது மிகவும் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதே இதற்குக் காரணமாகும்.
இந்த வளிமண்டலத் தொகுதியின் நகர்வு காரணமாக வரும் நாட்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இன்னும் காணப்பட்டாலும், மழையின் தீவிரம் மற்றும் வேகம் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டின் ஊடாக வீசும் மேற்கு மற்றும் தென்மேற்கு காற்றுத் தொகுதி காரணமாக மேல், சபரகமுவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
மிகக் கடுமையான மழை வீழ்ச்சியுடன் கூடிய காலநிலை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

