ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலாசாரத்தின் குரல்: “கூத்தாடி” திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து கௌரவித்த எம்பி ஆஷ் அம்பிகைப்பாகர்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பினர், ஆஸ்திரேலிய மத்திய அரசின் செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை கான்பெராவில் உள்ள நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து ஆலோனை நடத்தினர்.

பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் கலைப்படைப்பான “கூத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் பாரம்பரிய கிராமியக் கலைகளை சர்வதேச அளவில் எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்த காத்திரமான உரையாடலாக அமைந்தது.

சந்திப்பின் சிறப்பம்சமாக, TFAA சார்பில் இரவீ ஆனந்தராசா, “திரு”
மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான செல்வின் தாஸ் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கலை உலகின் மீதான தனது பற்றை வெளிப்படுத்தும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்கள், “கூத்தாடி” திரைப்படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான செல்வின் தாஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஒரு கலைஞனாக அவர் ஆற்றிவரும் மகத்தான சேவையைப் பாராட்டி வியப்படைந்தார்.
இந்த சந்திப்பின் போது கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்கள் ஆற்றிய உரையில், எம்முடைய வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு படைப்பாக ‘கூத்தாடி’ உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், அழியும் நிலையில் உள்ள கிராமிய கூத்துக் கலைகளையும், நாடக மரபுகளையும் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் பிள்ளைகளிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்றும், இந்த உன்னத முயற்சியை மேற்கொண்ட செல்வின் தாஸ் மற்றும் TFAA அமைப்பிற்கு தனது முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் உறுதியளித்தார்.

ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் கலாசாரத் தூதுவராகச் செயல்படும் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களின் இந்த அர்ப்பணிப்பை, அந்நாட்டு தமிழ் மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பானது, “கூத்தாடி” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆஸ்திரேலியா மற்றும் தாயகத் தமிழர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், உலக அரங்கில் தமிழ் கலைகளுக்கான ஒரு புதிய அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.