ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன மர்ம மரணம்: நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சடலமாக மீட்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2013-ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த ஒப்பந்தத்தில் பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவருக்கு எதிராக, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேசிய விமான சேவைக்காக 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் போது, சுமார் 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற சதி செய்ததாகவும், அதில் 1.45 மில்லியன் யூரோக்களை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

புரூணையில் தனது மனைவியின் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் ஊடாக இந்தப் பணத்தைப் பரிமாற்றம் செய்ததாகத் தெரிவித்து கடந்த மார்ச் 12-ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.

நீண்ட விளக்கமறியலின் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இதன்போது 500,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரு நபர்களுக்கு தலா 15,000 ரூபாய் பணம் வழங்கி, அவர்களை போலிப் பிணையாளர்களாக முன்னிறுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.
இந்தச் செயல் நீதிமன்றத்தின் நம்பிக்கையை மீறும் செயல் எனச் சுட்டிக்காட்டிய கொழும்பு மேலதிக நீதவான், நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது பிணையை ரத்து செய்ததுடன், அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், பொலிஸார் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலேயே, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் மர்மமான காரணங்களா என்பது குறித்து பிரேத பரிசோதனைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020-ஆம் ஆண்டிலும் இதே விமான கொள்வனவு ஊழல் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பேசப்பட்ட இந்த ஊழல் வழக்கின் முக்கிய சந்தேக நபரான கபில சந்திரசேனவின் மரணம் தற்போது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.