அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டுகளில்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம்

Meiveli Media Team

அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டுகளில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் அச்சிடப்படவுள்ளது. அரசாங்க நிறுவனங்களில் தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்கும் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், இந்த ‘லிமிடெட் எடிஷன்’ கடவுச்சீட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, சுதந்திரப் பிரகடனத்தின் பின்னணியில் ட்ரம்ப்பின் உத்தியோகபூர்வ படம் இடம்பெறும்.

அதன் கீழே அவரது கையெழுத்து தங்க நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். மற்றுமொரு பக்கத்தில் அமெரிக்காவை உருவாக்கிய முன்னோடிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வகை கடவுச்சீட்டுகள் வொஷிங்டனில் உள்ள அலுவலகங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும்,  இதற்கு மேலதிக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், விண்ணப்பதாரர்கள் இந்த விசேட பதிப்பை நிராகரிக்க முடியுமா என்பது தொடர்பில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.