நிலக்கரி கொள்வனவு விவகாரம்: ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்: ஜி.எல். பீரிஸ் கோரிக்கை
Meiveli Media Team

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிலக்கரி கொள்வனவு என்பது தனிப்பட்ட ஓர் அமைச்சரால் மட்டும் செய்யப்பட்டதல்ல. இது அரசால் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் மோசடியாகும்.
அனுபவமற்ற, பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியதற்கு முழு அமைச்சரவையுமே அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் வரிப்பணத்துடன் தொடர்புடைய இந்தப் பாரிய கொடுக்கல் வாங்கலில், சட்டமா அதிபரின் எவ்வித ஆலோசனையோ அல்லது அனுமதியோ பெறப்படவில்லை. இது சட்டத்தை முற்றாக மீறிய செயலாகும். கொண்டுவரப்பட்ட 12 கப்பல்களிலும் தரம் குறைந்த நிலக்கரியே இருந்தது. ஒப்பந்தப்படி அவற்றை நிராகரிக்க முழு அதிகாரம் இருந்தும், அரசாங்கம் வேண்டுமென்றே அதனைச் செய்யவில்லை. பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூடத்திற்குக் கூட எவ்விதத் தகுதியும் இருக்கவில்லை. இந்த நிலக்கரி மோசடியானது கடந்த கால மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விட மூன்று மடங்கு பெரியதாகும்.
இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒரு கருவி மாத்திரமே. ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்குப் பின்னணியில் இருந்துள்ளது. அமைச்சரவைக்கு என ஒரு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்பதை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன – என்று அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் பதவி விலகுவதுடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது என்று தெரிவித்த பீரிஸ், நாட்டு மக்களுக்கும் சட்டத்துக்கும் மதிப்பளித்து முழு அரசும் பதவி விலக வேண்டும் எனவும், தவறினால் எதிர்கால அரசு ஒன்றின் ஊடாக இதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

