இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து முன்னெடுக்கும் உலகளாவிய பங்களிப்பு மற்றும் தேசிய அளவிலான தாக்கம் குறித்து சர்வதேச லயன்ஸ் கழகம் விளக்கமளிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு, தினசரி ஒரு வேளை உணவு என்பது வெறுமனே போசணையை வழங்குவது மட்டுமல்ல; அது கற்றல், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும்.
இந்தச் சூழலில், சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் (Lions Clubs International Foundation – LCIF) வழிநடத்தப்படும் திட்டங்கள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்துடனான (WFP) இந்த அமைப்பின் ஒத்துழைப்பு மூலம் எட்டப்பட்ட தேசிய அளவிலான தாக்கத்தை விளக்கும் வகையில் இன்றைய தினம் (23) கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது.
WFP உடனான இந்த ஒத்துழைப்பானது, உலக உணவுத் திட்டம் அமெரிக்கா (World Food Program USA) மற்றும் LCIF ஆகியவற்றுக்கு இடையிலான 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு அங்கமாகும். இது இலங்கை மற்றும் நேபாளத்தை இலக்காகக் கொண்டது. இந்த திட்டத்தின் கீழ், இலங்கை உலக உணவுத் திட்ட (WFP Sri Lanka) அலுவலகம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொண்டது. இது உள்ளூர் உணவு வழங்குநர்கள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதோடு, பாடசாலை மாணவர்களுக்கான உணவின் போசாக்கின் தரத்தை மேம்படுத்தும் ‘Home-Grown School Feeding’ (வீட்டில் தயாரிக்கப்பட்ட பாடசாலை உணவு) திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.
அத்துடன், தற்போது இலங்கையிலுள்ள லயன்ஸ் கழக உறுப்பினர்கள் சுமார் 400,000 அமெரிக்க டொலர் பெறுமதியான ‘Protect Child Nutrition’ எனும் LCIF அங்கீகரிக்கப்பட்ட மானியத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5,000 சிறுவர்களுக்கு நாளாந்த பாடசாலை உணவை வழங்குகிறது.
மூன்று ஆண்டு கால தலையீடாக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், சமூகத்தின் மீளெழுச்சித் திறனை மேம்படுத்துவதற்கும், கல்வியை ஊக்குவிப்பதற்கும், குழந்தைகளின் போசாக்கை மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாக விளங்குகின்றது.
இலங்கையில் நிலவும் உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்யும் பணியில், LCIF இன் உலகளாவிய மானிய நடைமுறைகள் மூலம் எவ்வாறான பாரிய அளவிலான மற்றும் நிலைபேறான தலையீடுகள் சாத்தியமாகின்றன என்பதை இந்த சந்திப்பு எடுத்துரைத்தது. இது உலகளாவிய கூட்டாண்மைகளின் மூலம் உள்ளூர் சேவைகள் எவ்வாறு மேம்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியதோடு, முறையான மற்றும் உயர் தாக்கத்தைக் கொண்ட திட்டங்களுக்கு அமைப்பின் பங்களிப்பையும் மீள உறுதிப்படுத்தியது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் LCIF இன் தலைவர் மற்றும் அமைப்பின் முன்னாள் உடனடி சர்வதேசத் தலைவர் பேப்ரிசியோ ஒலிவேரா (Fabricio Oliveira), WFP இலங்கையின் பிரதிநிதி மற்றும் நாட்டுக்கான தூதுவர், முன்னாள் சர்வதேசத் தலைவர் மஹேந்திர அமரசூரிய, LCIF அறங்காவலர் மஹேஷ் பஸ்குவல் உள்ளிட்ட சிரேஷ்ட லயன்ஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பேப்ரிசியோ ஒலிவேரா, இந்த கூட்டாண்மைகளின் மாற்றும் சக்தியை வலியுறுத்திப் பேசியபோது, “WFP உடன் இணைவதன் மூலம், சமூகங்களின் தற்போதைய போசணைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் அவர்களின் நீண்டகால நல்வாழ்விலும் நாம் முதலீடு செய்கிறோம். உள்ளூர் தலைமைத்துவமும் சர்வதேச ஒத்துழைப்பும் எவ்வாறு அர்த்தமுள்ள, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். எதிர்காலத்தில் எந்தவொரு குழந்தையும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.” என்றார்.
LCIF ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இலங்கைக்கு சுமார் 17 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய நிதியுதவியை வழங்கியுள்ளது. “டிட்வா’ (Ditwah) சூறாவளி மீட்சிப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 300,000 அமெரிக்க டொலர் பாரிய அனர்த்த மானியம் உள்ளிட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், இவ்வாறான நிதியுதவியைப் பெற்றுள்ளன.
இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு டொலரும் நிர்வாகச் செலவுகளை காண்பித்து கழிக்கப்படாமல், முழுமையாக சேவைத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் LCIF இன் வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன, அதன் செயற்பாடுகளின் ஒரு சிறப்பம்சமாக விளங்குகின்றன.
இந்த மாதிரி கட்டமைப்பானது, ஒவ்வொரு நன்கொடையின் தாக்கம் மற்றும் வீச்சை அதிகரிப்பதோடு நன்கொடையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. லயன்ஸ் கழகத்தின் சேவையானது வெறுமனே அறக்கட்டளை செயற்பாடுகளுக்கு அப்பால், நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பு மூலம் இயக்கப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முறையான தலையீடுகளாக உருவாகியுள்ளதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டியது.
LCIF மற்றும் WFP போன்ற கூட்டாண்மைகள், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் ஒருங்கிணைந்த மற்றும் நிலைபேறான செயற்பாடுகளின் மதிப்பை எடுத்துக் காட்டுகின்றன. ஒற்றுமை, மூலோபாய முதலீடு மற்றும் சேவைக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், லயன்ஸ் உறுப்பினர்கள் தேசத்தின் மீளெழுச்சிமிக்க மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான எதிர்காலத்திற்குரிய அடித்தளத்தை அமைக்க உதவுகிறார்கள்.

